சனி, நவம்பர் 26, 2011

MUSCAT - TRIVANATHAPURAM (FLIGHT PHOTOS)



வேற ஒன்னும் இல்ல, போஸ்ட் போட்டு ரொம்ப நாளாச்சி, அதான் நான் இப்ப சமீபத்துல இந்தியா வந்தேன், அப்ப எடுத்த போட்டோஸ் இங்க போட்டாச்சி :-))

இது மஸ்கட் ஏர்போர்ட்




                                     இதுவும் மஸ்கட் ஏர்போர்ட்




வேற ஒரு பிளேன் ஸ்பீடா போகுது



ஐ, ஐ, பிளேன் கிளம்பிட்டு


பிளேன் ஸ்டேபிளா பறக்க ஆரம்பிச்சிட்டு






பக்கத்துல வேற ஒரு விமானம் பறக்குது (லைட் எரியுறது)

திருவனந்தபுரத்தோட ஏரியல் வியூ


மஸ்கட்டோட ஏரியல் வியூ


பக்கத்தில நின்னுகிட்டு இருந்த ஓமன் ஏர் விமானம்


இதுதான் நான் பிரயாணம் பண்ணுன விமானம் 


இதுதான் நான் பிரயாணம் பண்ணுன விமானம் 2


என்னோட விமானத்துக்கு Fuel Fill பண்ணுறாங்க


Duty Free சாக்லெட் இருக்கு இதுக்குள்ளே !!



வியாழன், ஜூன் 16, 2011

நாச்சியப்பன்


எந்த ஊரிலாவது பிச்சையெடுப்பவர்களோ, கைவிடப்பட்டவர்களோ நிரந்தரமாக தங்கி பார்த்திருக்கிறிர்களா? அவர்கள் வருமானத்துக்கு தகுந்தபடி ஒவ்வொரு ஊருக்கும் மாறிக்கொண்டே இருப்பார்கள். அப்படி வந்த ஒரு கூட்டத்துடன்தான் நாச்சியப்பனும் எங்கள் ஊருக்கு வந்தான். ஆரடிஉயரம், கூர்மையான பார்வை, சுத்தமான நெல்லை பாஷை பேசுபவனாக இருந்தாலும்  மெலுந்த தேகத்துடனும், உடலில் குறையில்லாவிட்டாலும் சற்று விந்திவிந்தி நடக்கூடியவனாகயிருந்தான். அவனுடன் வந்த கூட்டம் சிறிது நாளைக்குபின் ஊரைவிட்டு சென்றுவிட இவன் மட்டும் எங்கள் ஊரிலேயே தங்கிவிட்டான். எங்கள் ஊருக்கு வந்த நாள்முதல் யாரிடமும் கையேந்தாமல், கிடைக்கும் வேலையை செய்துகொண்டு எந்த வம்புக்கும் போகாமல், கூலிபாக்கி வைத்தாலும் எதிர்த்து பேசாமல் இருந்த காரணத்தால், ஊரில் இருந்தவர்களும் அவனை கண்டுகொள்ளவும் இல்லை, அவனை ஊரை விட்டு போகசொல்லவும் இல்லை.
தான்னுன்டு தன்வேலையுண்டு என்று இருந்தவனை ஊர்முழுவதும் பிரபலமடையவைத்தவர், சுப்பிரமணியம் வாத்தியார். பம்பாயில் நடந்த கலவரத்தைப்பற்றி ஆங்கில செய்திதாளில் வந்த செய்திகளை ஊராருக்கு சொல்லிகொண்டிருந்தவர், தனது மேதாவிதனத்தை காட்ட நாச்சியப்பனிடம் செய்திதாளைகொடுத்து எழுத்துக்கூட்டியாவது ஏதாவதொரு வாக்கியத்தை படிக்கச்சொன்னார். நாச்சியப்பன் வாத்தியாரைவிட அழகாக அனைத்து செய்திகளை வாசித்ததுடன் இல்லாமல் அவர் தவறாக மொழிபெயர்த்திருந்ததை சுட்டிக்காட்டினான். செய்திதாளிலுள்ள அனைத்து செய்திகளையும் பம்பாயின் லோக்கல் ஏரியாவின் அமைப்புகளின் விளக்கத்துடன், நாச்சியப்பன் மொழிபெயர்த்ததைக் கண்டு சுப்பிரமணியம் வாத்தியாரின் முகம் வெளிறிபோயிற்று. அதன் பின்பு, தான் பட்டபடிப்புவரை படித்திருப்பதாகவும், ஆங்கிலமும், ஹிந்தியும் நன்றாக தெரியும் என்ற சுயவிளக்கமும் அவனைப்பற்றிய மதிப்பை ஊராரிடம் மேலும் உயர்த்தின. தன்னுடைய உடல்நலம் ஒரு அலுவலகத்தில் அமர்ந்து பணிசெய்ய ஒத்துவராத காரணத்தினால் தான், கூலிவேலை செய்வதாக சொன்னதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், அதைப்பற்றி யாரும் கேள்வி கேட்டவும் இல்லை.
நாச்சியப்பனுக்கு இருந்த ஒரு வினோத பழக்கம், அவன் ஒரு பெருந்தீனிகாரனாயிருந்தான், இந்த வார்த்தையில் சற்றும் பொய்யில்லை, மிகையில்லை. நாச்சியப்பனை ஒவ்வொரு முறையும் வேலைக்கு எடுக்கும்போதும், அவன் கேட்பது சாப்பாடு மட்டுமே, கூலியில் முன்னே பின்னே இருந்தாலும் ஒத்துக்கொள்வான் ஆனால் சாப்பாடு இல்லையெனில் அவன் முழுமனதாய் வேலை செய்வான் என்று சொல்ல முடியாது. அதுவும் சாப்பாடு என்றால் சாதாரணமாகவும் இல்லை, ஐந்து நபர்கள் சாப்பிடக்கூடியதை ஒற்றையாளாய் சாப்பிடுவான்.  அதேபோல்தான் வேலை செய்வதும், ஐந்து நபர்கள் செய்யவேண்டிய வேலையை நாச்சியப்பன் ஒற்றையாளாய் செய்து முடித்துவிடுவான். ஊரில் ஏதாவது கல்யாணம் நடக்கும் காலத்தில் அவனது சந்தோஷம் பலமடங்கு அதிகரிக்கும். கல்யாணவீட்டுக்காரர் அழையாதபோதும் அவனாகவே சென்று வேலை செய்ய ஆரம்பித்துவிடுவான், யாரும் தடுப்பதுமில்லை. ஆனால்  நாச்சியப்பன் எந்த வேலையையும் ஏனோதானோவென்று செய்ததாக யாரும் இதுவரை குறைகூறியதுமில்லை.
நாச்சியப்பனை பற்றி ஊரார் பயங்கொள்ளவும், அவனைவிட்டு சற்று விலகியிருக்கவும் வைத்தது அவனுக்கு இருந்த உலகஅறிவு. இந்திய வரலாற்றை, ஒரு வரலாற்று ஆசிரியர் (சுப்பிரமணியம் வாத்தியார்) சொல்வதைவிட அவனால் சுவாரசியமாகவும், கோர்வையாகவும் சொல்ல இயலும். மோட்டார் வாகனங்களைப்பற்றி அவனுக்கு இருந்த அறிவு, உள்ளுரில் மெக்கானிகல் கடை வைத்திருந்த குமரனைவிட அதிகமாக இருந்தது. கிலுகிலுப்பைக்கு பதிலாக நான் விளையாட்டு பொருளாக வைத்திருந்த அபாகஸ் மூலம் அவனால் கணக்குபோட முடியும். இப்படி சகலவிதத்திலும் தனித்தன்மையானவனாக இருந்த நாச்சியப்பனின் மதிப்பு, அவன் எங்கள் ஊருக்கு வந்த மூன்று ஆண்டுகளுக்குப்பின், ஒரேநாளில் பாதாளத்தைவிட கீழிறங்கியது. அதுவும் அவனுக்குமிக பிடித்த கல்யாண சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது நிகழ்ந்தது தான் உச்சகட்ட சோகம்.
எங்கள் ஊரில் மட்டும் பிரபலமாக இருந்த நாச்சியப்பனை படத்துடன் செய்திதாளில் வருமளவு பிரபலப்படுத்தியவர், மாவட்ட காவல்துறை ஆய்வாளர். தனது படைபரிவாரங்களுடன் எங்கள் ஊருக்கு வந்தவர், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அமர்ந்துகொண்டு நாச்சியப்பனின் புகைப்படத்தினை காட்டி அவனை அழைத்துவரும்படி கூறினார். கல்யாணவீட்டில் பந்தியில் சாப்பிட்டு கொண்டிருந்தவனை குண்டுகட்டாக தூக்கி வந்தனர். நாச்சியப்பன் ஒரு முன்னாள் கடத்தல்காரனென்றும், போதை பொருட்களை கடத்தி விற்பவனென்றும், அதனால் சுமார் ஏழு வருடங்கள் சிறையில் இருந்தவன் என்றும், போதை பொருட்களை அதிகமாக உட்கொண்டதாலேயே உடல்நலம் பாதிக்கப்பட்டு விந்திவிந்தி நடப்பதாகவும், பெருந்தீனிகாரனாய் இருப்பதாகவும் மாவட்ட காவல்துறை ஆய்வாளர் ஊர்மக்களுக்கு அறிவித்தார். சுப்பிரமணியம் வாத்தியார் உள்பட பலர் அவசர வேலையிருக்கிறது என்று அந்த இடத்தைவிட்டு நழுவினர். இதுவரை யாருடனும் சச்சரவு செய்யாமலிருந்த நாச்சியப்பன் அன்று மாவட்ட காவல்துறை ஆய்வாளருடன் செய்த வாக்குவாதத்தை கண்ட மற்றவர்களுக்கும், அவர்களுக்கு அப்பொழுதுதான் ஞாபகத்துக்கு வந்த சொந்த வேலையின்நிமித்தம் அவ்விடத்தை விட்டு நகர்ந்தனர்.
நாச்சியப்பன், தான் விடுதலையான பின்பு திருந்தி வாழ்வதாகவும், தற்போது எந்தவிதத்திலும் சட்டவிரோத காரியங்களில் ஈடுபடவில்லையென்றும், தான் இந்த கிராமத்தில் வாழ்வது மனித உரிமை கழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவருக்கு தெரியும் என்றும், அவர்மூலம் காவல்துறைக்கு தெரிவித்திருப்பதாகவும் கூறினான். தன்னை கைது செய்வதற்கோ அல்லது விசாரணைக்கு அழைத்து செல்வதற்க்கு முன்பு, மனித உரிமை கழகத்தை சேர்ந்த வழக்கறிஞருக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்மென்றும், இல்லையெனில் மாவட்ட காவல்துறை ஆய்வாளரின் மீது தான் வழக்கு தொடுக்க வேண்டியது இருக்குமென, கிட்டதட்ட மாவட்ட காவல்துறை ஆய்வாளரை மிரட்டினான். இறுதியில் நாச்சியப்பன் எங்கள் ஊரைவிட்டு சென்றால் காவல்துறையிடம் தகவல் தெரிவிக்கவேண்டுமென்ற நிபந்தனையுடன், நாச்சியப்பனை கைது செய்யாமல் விட்டுவிட்டு மாவட்ட காவல்துறை ஆய்வாளர் தனது படைபரிவாரங்களுடன் புறப்பட்டு சென்றார்.
இதற்கு பின்பு ஊர்மக்கள் நாச்சியப்பனை அதிகமாக வேலைக்கு அழைப்பதில்லை. அவனும் அதிகமாய் அதனை கண்டுகொள்வதுமில்லை. ஆனால் கல்யாண வீடுகளை தவறவிடுவதுமில்லை. முன்பு கடைசி பந்தியில் சாப்பிட்டுக்கொண்டிருந்தவன் இப்பொழுது சமையலறையில் தனியாளாய் சாப்பிட்டுக்கொள்வான். அவனுடன் சரளமாக உரையாடிய ஜனங்கள்,  இப்பொழுது அவன் வருவதைக்கண்டாலே விலகிச்செல்ல ஆரம்பித்தனர். அவன் சொல்லும் மொழிபெயர்ப்புகளைக் கேட்பதற்க்கு இப்பொழுது யாரும் தயாராயும் இல்லை. மெக்கானிகல் கடைக்கு வரவேண்டாமென்று குமரனும் சொல்லிவிட்டார். எனது தந்தை அபாகஸ் கருவியையே உடைத்து போட்டு விட்டார். ஆனால் நாச்சியப்பன் எங்கள் ஊரைவிட்டு போகவேயில்லை, அவனை ஊரைவிட்டு போகச்சொல்லகூடிய தைரியம் யாருக்கும் வரவில்லை என்பதுதான் உண்மை.
சுமார் ஆறு மாதங்களுக்குப்பின் ஒருநாள் நாச்சியப்பனின் உயிர் மாரடைப்பின் காரணமாக இரவு தூக்கத்திலேயே பிரிந்தது. அவனது உடலை அகற்றுவதற்க்கு கூட யாரும் முன்வரவில்லை. மேலோட்டமான காவல்துறை விசாரணைக்குப்பின் உடலை புதைப்பதற்கு அனுமதித்தனர். ஊர் பொது மயானத்தில் நாச்சியப்பனை புதைக்ககூடாதென பிரச்சனைபண்ணி அதனை சாதித்தும் கொண்டார் சுப்பிரமணியம் வாத்தியார். அதனால் தாமிரபரணி நதியின் கரையொரம் நாச்சியப்பனின் உடல் புதைக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் ஆற்றை கடக்கும் போதும் நாச்சியப்பனை புதைத்த இடத்தை காட்டி இகழ்ச்சியாய் பேசுவது அனைவரின் வழக்கமானது. இயற்கைக்கே இது பொருக்கவில்லையோ என்னவோ அந்த ஆண்டு வந்த வெள்ளத்தில், நாச்சியப்பனை புதைத்த இடம் கூட தெரியாமல் மண்மேடாகிப்போனது.

திங்கள், மே 30, 2011

பரிபூரணம் அக்கா

ஒரு மத்தியான நேரத்தில் தர்மசங்கடமான நிலையில் பரிபூரணம் அக்காவையும் அவர் தம்பி சந்திரனையும் மிக நெருக்கத்தில் சந்தித்தேன். மிகுந்த தயக்கத்துடனும் அவமானத்துடனும் எனது வீட்டின் வாசலிலேயே நின்று கொண்டிருந்தார்கள். என் அம்மா அவர்களுடன் மிகஉக்கிரமாய் சண்டையிட்டுகொண்டிருந்தார். பரிபூரணம் அக்காவின் தந்தை என் வீட்டிலுள்ள அயன்பாக்ஸை ரிப்பேர் செய்கிறேன் என்று எடுத்து சென்றவர் அதனை விற்று அந்த பணத்தில் குடித்துவிட்டு வந்திருக்கிறார் என்ற செய்திதான் எனது அம்மாவை ரவுத்திரமடைய செய்திருந்தது. சற்றுநேரத்திற்கு பின் சமநிலையடைந்தவர் சிறு பிள்ளைகளுடன் சண்டையிட்டதின் குற்றஉணர்ச்சியாலேயோ, தந்தையின் தவறுக்கு நாணி நிற்கும் பிள்ளைகளைக் கண்டதாலோ மேற்கொண்டு பேச விரும்பாமல் அமைதிகாத்தார். ஒரு மாதத்தில் பணத்தைதிருப்பி தருவதாக பரிபூரணம் அக்காவின் உறுதிமொழியுடன் அன்றைய சண்டையின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைய ஆரம்பித்தது.
சுமார் இரு வாரங்களுக்கு முன்புதான் பரிபூரணம் அக்காவின் குடும்பம் எங்களது தெருவில், ஒரேயொரு அறையுள்ள ஒரு வீட்டில் குடிவந்தது. பரிபூரணம் அக்கா, சந்திரன் மற்றும் அவர்களது பெற்றோர் என மொத்தம் நான்கே பேர்தான் அவர்களது குடும்பத்தில்.  அவர்கள் தெருவில் யாருடனும் சிநேகம் பாவிக்காமல் தனித்த்தீவாகவே இருந்தார்கள். அத்தந்தை பழைய இரும்பு பித்தளைக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்துவந்தார். அதனால் காலையில் வீட்டை விட்டு செல்பவர் மாலை ஆறு மணிக்கு மேல்தான் திரும்பி வருவார். ஆனால் என்றுமே குடிக்கால் வந்ததில்லை. பரிபூரணம் அக்காவின் அம்மா நித்திய நோயாளி. வீட்டில் சமையல் வேலைகள்கூட செய்யாமல் எந்நேரமும் படுக்கையிலேயே இருக்கும் ஒரு விநேத ஜீவன். அக்குடும்பத்தின் அச்சாணியாக இருந்ததென்னவோ பரிபூரணம் அக்காதான். சந்திரன் என்னுடன் பள்ளியில் படித்துவந்தான்.  எனக்கு நிதமும் கிடைக்கும் இட்லியும், தோசையும் சந்திரனுக்கு தீபாவளிக்கும், பொங்கலுக்கும் மட்டுமே கிடைக்கும் என்பதின் அர்த்தம் எனக்கு நீண்ட நாட்களுக்கு புரியவில்லை.
பரிபூரணம் அக்கா செய்யாத வேலை என்று ஒன்றுமில்லை. களையெடுத்தல், நாற்றுநடுதல், கதிரறுத்தல், புல் அறுத்து மூட்டையாக கட்டி வீடுகளுக்கு கொடுப்பது, ரேஷன் கடையில் வரிசையில் நின்று பொருட்கள் வாங்கி கொடுப்பது, பால் கறந்து கொடுப்பது, ஆடு வளர்ப்பது, கோழி வளர்ப்பது, ஏன் ஒருமுறை கொத்தனாருக்கு சித்தாளாக வேலை செய்வதைக்கூட பார்த்திருக்கிறேன். இவற்றுக்குமிடையில் வீட்டில் சமையல் செய்வதும், ஆயிரம் பீடிக்கு குறையாமல் சுற்றுவதும் என்றுமே தவறியதில்லை. அவருடைய ஒரே நோக்கம் சந்திரனை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதுதான். தினமும் பள்ளிகூடத்திற்கு அழைத்து செல்லும் போதும், வரும் போதும், அதையே சொல்லி சொல்லி வளர்த்தார்கள். அதற்கேற்றாற்போல் சந்திரனும் மிக நன்றாகவே படித்தான். அனைத்து ஆசிரியர்களின் செல்லப்பிள்ளையாகவே இருந்தான். நன்றாக படித்து நல்ல வேலையிலமர்ந்து அக்காவை காப்பாற்றுவேன் என்று மனதிற்குள் வீரசபதமே செய்திருந்தான் என தோன்றியது. பள்ளியைப்பற்றி அவனுக்கு இருந்த ஒரேயெரு சந்தேகம் ஏன் மதியம் மட்டும் உணவு கொடுக்கிறார்கள், காலையும், மாலையும் கொடுப்பதில்லை என்பதுதான்.
ஒரு நன்நாளில் பரிபூரணம் அக்காவிற்க்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக செய்தி தெருமுழுவதும் நமட்டுச்சிரிப்புடன் சொல்லப்பட்டது. என் அம்மாவிடம் அதைப்பற்றி கேட்டபொழுதுபோய் பாட புஸ்தகத்தை எடுத்து படிடா, பெரிய மனுஷனாட்டம் கேள்வியெல்லாம் கேட்டுகிட்டுஎன்று திட்டிவிட்டு அகன்று சென்றார். பரிபூரணம் அக்காவும் அவரது கணவரும் தம்பதி சமேதராய் மறுவீட்டிற்காக பரிபூரணம் அக்காவின் வீட்டிற்க்கு வந்தபோதுதான் நான் பார்த்தேன். நன்கு உயரமாய், சுருட்டை முடியுடன், பெரிய மீசையுடன், கிராமத்து மனிதருக்குறிய அனைத்து லட்சணங்களுடனும் நன்றாகவே இருந்தார். வெற்றிலை தோட்டம் வைத்திருக்கிறார் என்றும், நல்ல வருமானம் உள்ளவர் என்றும் தெரியவந்தபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அதைப்போலவே அவரும் சந்திரனின் படிப்பு செலவை தான் ஏற்றுக்கொள்வதாகவும், இனி பரிபூரணம் அக்கா எந்தவித வேலைக்கும் செல்ல வேண்டிய அவசியமில்லையென்று கூறினார். ஆனால் பரிபூரணம் அக்கா மாப்பிள்ளையுடன், மாப்பிள்ளையின் வீட்டிற்க்கு செல்லவில்லை, அவருடைய வீட்டிலேயே இருந்தார். இரண்டாம்தாரமாய் கல்யாணம் செய்து கொடுத்திருக்கிறார்கள் என்ற காரணம் அதன்பின்புதான் எனக்கு தெரிய வந்தது. 
பரிபூரணம் அக்காவின் கணவர், மிகச்சரியாய் மதிய சாப்பாட்டின் நேரத்திற்க்கு பரிபூரணம் அக்காவின் வீட்டிற்க்கு வருவார். அவர் வரும்போதெல்லாம் அம்மா என்னையும், சந்திரனையும் அழைத்து தொலைக்காட்சியின் முன்பு உட்காரவைத்துவிடுவார்கள். சிறிது நேரத்தில் பரிபூரணம் அக்காவின் அம்மாவும், அப்பாவும் கூட எங்களது வீட்டிற்க்கு வந்து தொலைக்காட்சி பார்க்க ஆரம்பிப்பார்கள். சில சமயம் எனது வீட்டிலேயே அவர்கள் மதிய உணவையும் உண்பார்கள்.  ஒரு நாள் தொலைக்காட்சி வேண்டாம்மென்றும், விளையாடவே பிரியம் என்று நான் சொன்னதற்க்கு, எப்போதுமே என்னை அடிக்காத  அம்மாவிடமிருந்து எனக்கு இரண்டு அடி கிடைத்தது. மூன்று மாதங்களுக்கு பின் பரிபூரணம் அக்கா மறுபடியும் வேலைக்கு செல்ல ஆரம்பித்தார்கள். ஒன்றரை வருடத்திற்குள்ளாகவே பரிபூரணம் அக்காவிற்க்கு அழகிய பெண்குழந்தை பிறந்தது. அதற்கு செல்வ லட்சுமி என்று சந்திரன்தான் பெயர் சூட்டினான். பரிபூரணம் அக்காவின் கணவரின் வருகை இப்பொழுது வாரத்திற்கு ஒன்றாய் சுருங்கிவிட்டது.
நன்றாக படித்த சந்திரனுக்கு பட்டபடிப்பு முடித்தவுடனேயே ஆசிரியருக்கான வேலை கிடைத்தது. வேலை கிடைத்துவிட்டது என்று தெரிந்தவுடன், நமட்டுசிரிப்புடன் வம்பு பேசிய அனைவரும், அன்னோன்யம் பாராட்ட ஆரம்பித்தார்கள். வந்த அனைவரும் அவர்களது சொந்தத்திலேயே பெண் இருப்பதாகவும், வேறு எங்கும் செல்ல வேண்டாமென்றும் சொல்லி சந்திரனை தங்கள் வீட்டுமாப்பிள்ளையாக்கி கொள்வதற்கே ஆர்வம் காட்டினார்கள். இந்த நேரத்தில்தான் புயலென வந்தார் புனித சூசை. புனித சூசை எங்கள் ஊரின் போஸ்ட் மாஸ்டர். அவர் பரிபூரணம் அக்காவின் தாய்மாமன் என்பது அதன் பின்புதான் ஊரிலுள்ள அனைவருக்கும் தெரியவந்தது. ஆசிரியர் வேலையில் இருப்பவருக்கு அதே படிப்பு படித்த பெண்தான் தகுதியானவள் என்று சொல்லி தனது மகளையே திருமணம் செய்வித்தார். மிக கவனமாய் உள்ளுரில் கிடைக்கவிருந்த வேலையை நிராகரித்துவிட்டு 80 கிலோமீட்டர் தள்ளியுள்ள ஊரில் வேலை கிடைக்க ஏற்ப்பாடு செய்தார்.
வேலையில் சேர்ந்த சந்திரன் முதல் ஒரு வருடம், மாதம் தவறாமல் பணம் அனுப்பி வந்தான். அதன்பின்பு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை, மூன்று மாதத்திற்கு ஒரு முறை என்று இடைவெளிகள் அதிகமாகிக்கொண்டே சென்றன. தற்பொழுது முற்றிலும் நின்றுவிட்ட நிலைமைதான். இப்போது பரிபூரணம் அக்கா முன்பு செய்த அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறார். இப்பொழுதும் பரிபூரணம் அக்காவின் கணவர் வாரத்துக்கு ஒரு முறை வந்து கொண்டிருக்கிறார். அந்தசமயத்தில் செல்வ லட்சுமியும்,  பரிபூரணம் அக்காவின் பெற்றோரும் எனது வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பார்கள். ஊராரின் நமட்டுசிரிப்பும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பரிபூரணம் அக்காவின் வீட்டிலிருந்து வீரசபதங்களும் வந்து கொண்டுதான் இருக்கிறது. என்ன, சந்திரனுக்கு பதில் செல்வ லட்சுமி, அவ்வளவுதான் வித்தியாசம்.



பின்குறிப்பு: இக்கதை கவிஞர் கலாப்ரியாவின்  அக்காவுடன் பிறந்தவர்கள் அதிஷ்டம் செய்தவர்கள்  என்ற கவிதையின் தாக்கத்தினால் எழுதப்பட்டது.